சபரிமலை ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை நடை அடைப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஓணம் மற்றும் மாதாந்திர வழிபாடு முடிந்து நாளை இரவு நடை சாத்தப்பட உள்ளது. ஓணம் பண்டிகைக்காக கடந்த 13ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து மறுநாள் அதிகாலை முதல் சிறப்பு பூஜை, வழிபாடுகள் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்களுக்கு ஓணம் சிறப்பு சத்ய எனும் விருந்து வழங்கப்பட்டன. இந்நிலையில் மாத வழிபாடுகள் கடந்த 16ம் தேதி தொடங்கின.

தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை (சனி) மாதபூஜை வழிபாடுகள் நிறைவடைய உள்ளது. ஆகவே, அன்று இரவு 9 மணிக்கு அரிவராசனம் தாலாட்டு பாடலுடன் நடை அடைக்கப்படும். ஓணம் பண்டிகையுடன் மாத வழிபாடுகளும் இடம் பெற்றதால் 8 நாட்கள் நடை திறந்திருந்தது. இதனால் லட்சக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in