புதுச்சேரி திருக்காமீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் - அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு

திருக்காமீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்
திருக்காமீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரசித்திபெற்ற திருக்காமீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடந்தது. இதில், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் வைக்கப்பட்டு, திருத்தேரோட்டம் நடந்தது. இதில், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான சிவா ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in