பழநியில் ஆக.24, 25-ல் முத்தமிழ் முருகன் மாநாடு: பந்தல்கால் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

பழநியில் பந்தல்கால் நடும் நிகழ்வு
பழநியில் பந்தல்கால் நடும் நிகழ்வு
Updated on
1 min read

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ல் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் பந்தல்கால் ஊன்றப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமய பெரியோர்கள், ஆன்மிக அன்பர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

கடந்த வாரம் மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பழனியாண்டவர் கல்லூரியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்து, அனைத்து அரசு துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தினார். அதில், மாநாட்டு பந்தல் அமைப்பது, உணவு, குடிநீர், கழிப்பறை, தங்குமிடம் வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநாட்டு அரங்கம் அமைப்பதற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) காலை பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் பந்தல்கால் ஊன்றப்பட்டது. தொடர்ந்து, மாநாட்டு பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஶ்ரீதர், கூடுதல் ஆணையர் சுகுமார், ஹரிப்பிரியா, எம் எல் ஏ-க்கள் செந்தில்குமார், காந்திராஜன், எம்பி சச்சிதானந்தம், மாவட்ட ஆட்சியர் பூங்கோடி, பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in