தைப்பூச திருவிழாவையொட்டி வள்ளிக்கு பிறந்த வீட்டு சீதனம்: பழநி கோயிலுக்கு குறவர் இன மக்கள் ஊர்வலமாக கொண்டுவந்தனர்

பழநி மலைக் கோயிலில் வள்ளிக்கு பிறந்த வீட்டு சீதனம் கொண்டுவந்த குறவர் இன மக்கள்.
பழநி மலைக் கோயிலில் வள்ளிக்கு பிறந்த வீட்டு சீதனம் கொண்டுவந்த குறவர் இன மக்கள்.
Updated on
1 min read

பழநி: தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநியில் திருக்கல்யாண உற்சவம் முடிந்த நிலையில், வள்ளிக்கு தாய்வீட்டு சீதனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜன.19-ம்தேதி தொடங்கி, ஜன.28-ம் தேதி வரை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக வள்ளி, தெய்வானை மற்றும் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்நிலையில், வள்ளிக்குப் பிறந்த வீட்டுச் சீதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த குறவர்இன மக்கள், பழநியில் ஒன்றுகூடினர். தொடர்ந்து, குறமகள் வள்ளிப் பெருந்தகை பாசறை சார்பில், தங்களது பாரம்பரிய வழக்கப்படி ஆதிவாசி, வள்ளி, தெய்வானை, முருகன் வேடமிட்டு, மேளதாளங்கள் முழுங்க, ஆட்டம் பாட்டத்துடன் சீதனம் கொண்டு வந்தனர்.

தேன், திணை மாவு, மா, பலா,வாழை உள்ளிட்ட பழ வகைகள், கிழங்குகள், வில் அம்பு, வேல்உள்ளிட்ட சீதனங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, மலைக்கோயில் செல்லும் வழியில் உள்ளவள்ளி சுனையில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, மலைக் கோயிலில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்துவிட்டு, தாங்கள் கொண்டு வந்த சீதனங்களை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

கேரள பழங்குடி மக்கள்: மேலும், அலகு குத்தியும், பறவை காவடியில் வந்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதேபோல, கேரளமாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்களும், வள்ளிக்கு தாய் வீட்டுச் சீதனம்கொண்டு வந்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in