திருஉத்தரகோசமங்கை நடராஜருக்கு சந்தனக்காப்பு களையும் அபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்

சந்தனக்காப்பு களையப்பட்டபின் மரகத நடராஜருக்கு நடைபெற்ற அபிஷேகம்
சந்தனக்காப்பு களையப்பட்டபின் மரகத நடராஜருக்கு நடைபெற்ற அபிஷேகம்
Updated on
2 min read

ராமநாதபுரம்: பிரசித்தி பெற்ற திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதியில் சந்தனக் காப்புகளையும் அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நாளை அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற ஆதிசிதம்பரம் என அழைக்கப்படும் மங்களநாதர் சுவாமி உடனுறை மங்களேஸ்வரி கோயிலில் மரகத நடராஜருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. ஆறு அடி உயரமுள்ள ஒற்றை பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை விலைமதிப்பற்றது. இச்சிலை ஒலி, ஒளி, மேள தாளங்களால் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகவும், மத்தளம் ஒலித்தால் மரகதம் உடையும் என்பதற்கேற்ப, இங்கு ஆண்டு முழுவதும் மரகத நடாஜர் சிலை சந்தனம்பூசி பாதுகாக்கப்படுகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை ஆருத்ரா தரிசன விழாவுக்கு முந்தைய நாள் இக்கோயிலில் மட்டும் சந்தனக்காப்புகளையும் அபிஷேகம் நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மரகத நடராஜர் சந்தனக்காப்பு இன்றி திருமேனியாய் காட்சி அளிப்பதால் மற்ற நடாராஜர் கோயில்களைவிட இங்கு நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.

மரகத நடாஜரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
மரகத நடாஜரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

ஆருத்ரா தரிசன விழா: இந்தாண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா, கடந்த 18-ம் தேதி காப்புக் கட்டுடன் தொடங்கியது. அதனையடுத்து இன்று மரகத நடராஜர் திருமேனி மீது பூசப்பட்ட சந்தனக்காப்பு களையும் அபிஷேகம் காலை 8 மணிக்கு தொடங்கியது. அதனையடுத்து காலை 8.30 மணிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், மஞ்சள், திருநீர், மூலிகை என 33 வகையான மகா அபிஷேகம் நடைபெற்றது.

அதனையடுத்து திருமேனியான நடராஜரையும், மகா அபிஷேகத்தையும் பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரூ.250, ரூ.100, ரூ.10 கட்டணங்களிலும் மற்றும் இலவச தரிசனத்திலும் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து நடராஜரை தரிசித்தனர். வழக்கத்தைவிட இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. கோயில் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதனையடுத்து பக்தர்கள் மங்களநாதர் மற்றும் மங்களேஸ்வரி சன்னதிகளிலும், 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தல விருசட்மான இலந்தைமரம், அங்குள்ள சகஸ்கர லிங்கம் ஆகியவற்றையும் தரிசித்தனர்.

இரவு 9 மணி முதல் தேவார இசை, பண்ணிசையும், இரவு 10 மணிக்கு கூத்தர் பெருமான் கல்தேர் மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு மேல் மரகத நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்றது. அதனையடுத்து நாளை (27-ம் தேதி) அதிகாலை அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.

பின்னர் காலை 10 மணிக்கு கூத்தர் பெருமான் திருவீதி உலாவும், மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், இரவு 8 மணிக்கு மேல் மாணிக்க வாசக சுவாமிகளுக்கு காட்சி கொடுத்து சிறப்பு நாதஸ்வரத்தோடு பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளி ரிஷப சேவையும் விழா நிறைவு பெறும். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை தலைமையில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in