

இ
ந்தியாவின் கலாசார உறவுகள் தென்கிழக்காசிய நாடுகளுடன் உருவான விதம் குறித்த பிரவாசி பாரதிய திவஸ் நிகழ்வு சிங்கப்பூரில் சமீபத்தில் நடத்தப்பட்டது. வர்த்தகம், சினிமா, டிஜிட்டல் மீடியா, இலக்கியம், ஆயுர்வேதம், யோகா, நிகழ்த்து கலைகள், காட்சிக் கலைகள் குறித்து வெவ்வேறு அமர்வுகளில் விவாதம் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
புராதனக் கடல்பயணங்களின் வாயிலாக இந்தியா தொடங்கிய உறவுக்குப் புதிய பரிமாணத்தை அளிக்கும் வகையில் ஜனவரி 6, 7 தேதிகளில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு ‘ஏன்சியன்ட் ரூட், நியூ ஜர்னி: டயஸ்போரா இன் தி டைனமிக் ஏசியன் இந்தியா பார்ட்னர்ஷிப்’ என்பதுதான் தலைப்பு.
இந்தியாவுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான பரிவர்த்தனைகளைக் காண்பிக்கும் வண்ணம் ஒளிப்படக் கண்காட்சியும் நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியை வடிவமைத்தவர் டாக்டர் கவுரி பரிமூ கிருஷ்ணன். “இந்தக் கண்காட்சியில் இந்திய சமூகமும் தெற்காசிய சமூகங்களும் முன்பு அறிந்திராத நிலங்களுக்குப் பயணம் செய்து குடிபெயர்ந்து, எப்படித் தங்கள் வாழ்க்கையைச் செழுமைப்படுத்திக்கொண்டனர் என்பதைத் தெரிவிக்கும் படங்கள் இடம்பெற்றிருந்தன.
புராதன வர்த்தகர்கள், பயணிகள், ஓவியர்கள், மத, அரசியல் தலைவர்களின் சேகரிப்புகளிலிருந்து இந்தக் கண்காட்சிக்கான பொருட்கள் பெறப்பட்டன. இந்திய, தெற்காசிய நாடுகளில் உள்ள கோயில் கட்டிடக் கலையின் தொன்மையான சின்னங்களின் ஒளிப்படங்களும் சேகரிக்கப்பட்டன.” என்கிறார்.
ஆசியான் (The Association of Southeast Asian Nations ) அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பும் இந்தியாவும் கலாசார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் பிணைப்பையும் சவுகரியத்தையும் பகிர்பவை என்று கூறினார்.