திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2 நாட்களில் 30 லட்சம் பேர் கிரிவலம்

திருவண்ணாமலையில் நேற்று 2-வது நாளாக கிரிவலம் சென்ற பக்தர்கள்.
திருவண்ணாமலையில் நேற்று 2-வது நாளாக கிரிவலம் சென்ற பக்தர்கள்.
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2-வதுநாளாக நேற்றும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திருவண்ணாமலைக்கு கடந்த 4 நாட்களாக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். மகா தீபம் ஏற்றப்படும், திரு அண்ணாமலையை 14 கி.மீ., தொலைவு நடந்து, ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி கிரிவலம் சென்றனர். காலை 6 மணி முதலே பக்தர்கள் குவியத் தொடங்கி, மாலை 4 மணியளவில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. பக்தர்களின் கிரிவலம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. பிற்பகல் 3.07 மணி வரை பவுர்ணமி இருந்ததால் மழை மற்றும் வெயிலை பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கடந்த 2 நாட்களாக சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in