திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் அக்.8-ல் ராகு பெயர்ச்சி: முதல்கட்ட லட்சார்ச்சனை நாளை தொடக்கம்

நாகவல்லி, நாககன்னி சமேத ராகுபகவான்.
நாகவல்லி, நாககன்னி சமேத ராகுபகவான்.
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள கிரிகுஜாம்பிகையம்மன், பிறையணியம்மன் உடனாய நாகநாதசுவாமி கோயிலில் உள்ள ராகு பகவான் சந்நிதியில் ராகு பெயர்ச்சி விழா அக்.8-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, நாளை(அக்.2) முதல் 4-ம் தேதி வரை முதற்கட்ட லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

நவக்கிரகங்களில் ஒன்றான ராகு பகவான் தலமாக போற்றப்படும் இந்த கோயிலில், ராகுபகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகரும் நிகழ்வான, ராகு பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

மேஷத்திலிருந்து மீனத்துக்கு: அந்த வகையில் நிகழாண்டு, அக்.8-ம் தேதி மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைகிறார். அன்றைய தினம் ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி, முதற்கட்ட லட்சார்ச்சனை நாளை(அக்.2) தொடங்கி அக்.4-ம் தேதி வரை தினமும் காலை 9.30 மணி முதல் 1 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறுகிறது. 2-ம் கட்ட லட்சார்ச்சனை அக்.9-ம் தேதி முதல் அக்.11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை துணை ஆணையர் தா.உமாதேவி, உதவி ஆணையர் சு.சாந்தா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in