வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவையொட்டி நேற்றிரவு நடைபெற்ற பெரிய தேர் பவனி. (உள்படம்) புனித ஆரோக்கிய மாதா. படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவையொட்டி நேற்றிரவு நடைபெற்ற பெரிய தேர் பவனி. (உள்படம்) புனித ஆரோக்கிய மாதா. படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published on

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஆரோக்கிய மாதா எழுந்தருள பெரிய தேர்பவனி நேற்று நடந்தது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை பெரிய தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக இதையொட்டி, தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, பேராலய கலையரங்கத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார், மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் ஆகியோர் தலைமையில் சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது.

பின்னர், ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தேரை புனிதம் செய்து வைத்தார். அதன்பிறகு முதன்முறையாக அவர் தலைமையில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது. இதில், நாகூர் ஆண்டவர் தர்கா தலைமை அறங்காவலர் முகம்மது ஹாஜி உசேன், பரம்பரை கலீபா மஸ்தான், வேளாங்கண்ணி ரஜகிரீஸ்வரர் கோயில் தலைமை குருக்கள் நீலகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு புனித ஆரோக்கிய மாதா பெரிய தேரிலும், அதற்கு முன்னால் 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதா ஆகியோரும் எழுந்தருள தேர் பவனி நடைபெற்றது.

தேர் பவனி, ஆலயத்தை சுற்றி ஊர்வலமாகச் சென்று மீண்டும் பேராலய முகப்பை வந்தடைந்தது. பக்தர்கள் 'மரியே வாழ்க, மாதாவே வாழ்க, பசிலிக்கா பசிலிக்கா' என பக்திப் பரவசத்துடன் முழக்கங்களை எழுப்பினர். விழாவில், ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார், துணை அதிபர் அற்புதராஜ் அடிகளார் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in