பியூஷ் சாவ்லாவை ஏலம் எடுத்த சென்னை அணி: கிண்டல் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பியூஷ் சாவ்லாவை ஏலம் எடுத்த சென்னை அணி: கிண்டல் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
Updated on
1 min read

ஐபிஎல் 2020 ஆம் ஆண்டு ஏலத்தில் பியூஷ் சாவ்லாவை ஏலம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கிண்டல் செய்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

கொல்கத்தாவில் 2020-ம் ஆண்டு ஐபிஎல் டி20 போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடந்தது. மொத்தம் 73 வீரர்களுக்கான இடத்தில் மொத்தம் 332 வீரர்கள் போட்டியிட்டனர். 8 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்று வீரர்களைத் தேர்வு செய்தனர். இதில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸை ரூ.15.50 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.

இந்த நிலையில் சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக கொல்கத்தாவின் அணியில் இருந்த பியூஷ் சாவ்லாவை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதனைத் தொடர்ந்து பியூஷ் சாவ்லா ஏலம் எடுக்கப்பட்டதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாகப் பதிவிட்டடிருந்தது

இப்பதிவுக்குக் கீழே கொல்கத்தா அணி, “பியூஷ் சாவ்லாவை நீங்கள் ஏலம் எடுத்ததற்கான காரணம் எங்களுக்குத் தெரியும்” என்று பதிவிட்டு #DadsArmy என்று குறிப்பிட்டு சாவ்லா தனது மகனுடன் இருக்கும் படத்தையும் பதிவிட்டது. (சென்னை அணியில் உள்ள வீரர்கள் பெரும்பாலும் 30 வயதைக் கடந்தவர்களாக இருப்பதால் அந்த அணி #DadsArmy என்று ஐபிஎல் ரசிகர்களால் அழைக்கப்படுகிறது. )

இதனைத் தொடர்ந்து இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிறைய சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில், சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லாவை அதிக விலைக்கு ஏலம் எடுத்ததற்காக சென்னை ரசிகர்கள் சிஎஸ்கே அணி நிர்வாகத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in