

தேங்காய்ப் பாலில் செய்யப்படும் ஒரு சுவை மிகுந்த குழம்பு, சொதி. சொதி இல்லாமல் நெல்லை உணவு நிறைவடையாது.
எப்படிச் செய்வது?
தேங்காயைத் துருவி, ஒரு கப் தண்ணீர் சேர்த்துப் பால் எடுத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தேங்காய் சக்கையில் மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்துப் பால் எடுத்தால் அது இரண்டாம் பால். மூன்றாவது முறையும் இதே போன்று பால் எடுத்துக்கொள்ளுங்கள்.
பாசிப் பருப்பை நன்றாக வேகவையுங்கள். பூண்டையும் கீறிய பச்சை மிளகாயையும் கால் டீஸ்பூன் நெய்யில் வதக்கிக்கொள்ளுங்கள். மூன்றாவது பாலில் வதக்கிய பூண்டு, பச்சை மிளகாய், காய்கறிகளைச் சேர்த்து வேகவையுங்கள். காய்கறிகள் நன்கு வெந்ததும் பாசிப் பருப்பை மசித்துச் சேருங்கள். முதல் மற்றும் இரண்டாம் பாலையும் சேர்த்து, குழம்பு வெதுவெதுப்பாகும்வரை அடுப்பில்வைத்து இறக்கிவிடுங்கள். இறக்கியதும் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, சுவைக்கேற்ப உப்பு சேருங்கள். கால் டீஸ்பூன் நெய்யில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து சொதியில் சேருங்கள்.
இஞ்சி பச்சடி, உருளை வறுவல், வாழைக்காய் சிப்ஸுடன் பரிமாறுங்கள். குழம்பைக் கொதிக்கவிடக் கூடாது. மிதமான சூட்டில் இருக்கும்போதே இறக்கிவிடுங்கள். குழம்பை அடுப்பிலிருந்து இறக்கிய பின்னரே உப்பு, எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.
- சங்கரி பகவதி