

தொகுப்பு: ப்ரதிமா
பசும்மஞ்சளைப் பொங்கல் பண்டிகையின்போதுதான் பலரது வீடுகளிலும் பார்க்க முடியும். அதுவும் சம்பிரதாயத்துக்கு ஒரு மஞ்சள் கொத்தை வாங்கிவைப்பார்கள்; பொங்கல் பானையில் கட்டுவார்கள். சிறந்த கிருமிநாசினியான மஞ்சளை அவ்வப்போது சமையலில் பயன்படுத்துவது நல்லது என்று சொல்வதுடன் பச்சை மஞ்சளில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையைத் தருகிறார் சென்னை போரூரைச் சேர்ந்த சுதா செல்வகுமார்.
என்னென்ன தேவை?
துருவிய பச்சை மஞ்சள் - அரை கப், அரைத்துக்கொள்ள: வெங்காயம், தக்காளி - தலா 1, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - கால் அங்குலம், பூண்டு - 4 பல், தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், தண்ணீரில் ஊறவைத்த முந்திரிப் பருப்பு - ஆறு, மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, சோம்பு - 1 டீஸ்பூன், நெய், உப்பு - தேவைக்கு
எப்படிச் செய்வது?
வாணலியில் நெய் ஊற்றிச் சூடானதும் துருவிய மஞ்சளைச் சேர்த்து சுருள வதக்குங்கள். பிறகு அடுப்பின் தணலைக் குறைத்து, அரைக்கக் கொடுத்த பொருட்களைச் சிறிது நீர்விட்டு அரைத்து மஞ்சளுடன் கலந்து கொள்ளுங்கள். தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு, கறிவேப்பிலை இரண்டையும் போட்டுத் தாளித்து, கொதிக்கும் கிரேவியில் ஊற்றுங்கள். மல்லித்தழையைத் தூவி இறக்கிப் பரிமாறுங்கள்.