

தொகுப்பு: ப்ரதிமா
தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது.
தீபத் திருநாளன்று வீடுகளில் விளக்கேற்றி வைப்பதுடன் பொரி உருண்டை, அப்பம் போன்றவற்றைச் ஜோதி வடிவான இறைவனுக்குப் படைப்பார்கள். எளிமையே உன்னதம் என்ற தத்துவத்தை இந்தப் படையல் உணர்த்தும். தீபத் திருநாள் படையலில் சிலவற்றைச் செய்யக் கற்றுத்தருகிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி.
அப்பம்
என்னென்ன தேவை?
கோதுமை மாவு - 2 கப்
அரிசி மாவு - 4 டீஸ்பூன்
வெல்லத் தூள் - 2 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கோதுமை மாவு, அரிசி மாவு, வெல்லம், உப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துத் தோசை மாவு பதத்துக்குக் கரைத்து அரை மணி நேரம் ஊறவிடுங்கள்.
பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து, குழிகளில் எண்ணெய் தடவி மாவைக் குழிக்கரண்டியால் எடுத்து ஊற்றுங்கள். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு இருபுறங்களும் பொன்னிறமானதும் எடுங்கள்.