

தொகுப்பு: ப்ரதிமா
தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது.
தீபத் திருநாளன்று வீடுகளில் விளக்கேற்றி வைப்பதுடன் பொரி உருண்டை, அப்பம் போன்றவற்றைச் ஜோதி வடிவான இறைவனுக்குப் படைப்பார்கள். எளிமையே உன்னதம் என்ற தத்துவத்தை இந்தப் படையல் உணர்த்தும். தீபத் திருநாள் படையலில் சிலவற்றைச் செய்யக் கற்றுத்தருகிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி.
பொரி உருண்டை
என்னென்ன தேவை?
பொரி - 5 கப்
தூள் வெல்லம் - 3 கப்
தேங்காய்
(பல் பல்லாகக் கீறியது) - அரை கப்
ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி,
நெய் - தலா 1 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பொரியைச் சுத்தம்செய்து அகலமான பாத்திரத்தில் கொட்டுங்கள். வெல்லத்தைப் பாகு காய்ச்சுங்கள். பாகைச் சிறிதளவு எடுத்து தண்ணீரில் விட்டால் கரையாமல் கெட்டியான பதத்துக்கு வந்ததும் ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி, தேன் ஆகியவற்றைக் கலந்து பொரியில் கொட்டி நன்றாகக் கிளறுங்கள். சூடு லேசாக ஆறியதும் உருண்டைகளாகப் பிடியுங்கள். இதேபோல் அவல் பொரியிலும் செய்யலாம்.