

தொகுப்பு: அன்பு
சுரைக்காய் போன்ற காய்களைச் சிலர் கூட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், நீர்ச்சத்து அதிகமுள்ள சுரைக்காயில் இனிப்பு, காரம் எனப் பலவிதமான உணவைச் சமைக்க முடியும். அதுவும் குளிர்காலம் தொடங்கும் வேளையில் சுரைக்காயில் போளி, பக்கோடா, கேசரி, அடை போன்ற சுவையான பதார்த்தங்களைச் சமைத்து ருசிக்க உதவுகிறார் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைப் பகுதியைச் சேர்ந்த செ. கலைவாணி.
தோசை
என்னென்ன தேவை?
புழுங்கலரிசி – 200 கிராம்
சுரைக்காய்த் துருவல் – 1 கப்
மிளகாய் வற்றல் – 5
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – ஒரு கொத்து
ஆவாரம் பூ – 1 பிடி
எண்ணெய், உப்பு – தேவைக்கு
எப்படிச் செய்வது?
புழுங்கலரிசியை இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய அரிசியுடன் சுரைக்காய்த் துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயத் தூள், உப்பு, ஆவாரம் பூ ஆகியவற்றைச் சேர்த்துத் தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளுங்கள். கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி மாவுடன் கலந்து தோசையாகச் சுட்டெடுங்கள்.