

தொகுப்பு: அன்பு
சுரைக்காய் போன்ற காய்களைச் சிலர் கூட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், நீர்ச்சத்து அதிகமுள்ள சுரைக்காயில் இனிப்பு, காரம் எனப் பலவிதமான உணவைச் சமைக்க முடியும். அதுவும் குளிர்காலம் தொடங்கும் வேளையில் சுரைக்காயில் போளி, பக்கோடா, கேசரி, அடை போன்ற சுவையான பதார்த்தங்களைச் சமைத்து ருசிக்க உதவுகிறார் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைப் பகுதியைச் சேர்ந்த செ. கலைவாணி.
சுரைக்காய் அடை
என்னென்ன தேவை?
சுரைக்காய் நறுக்கியது – 1 கப்
வெங்காயம் – 1
கடலைப் பருப்பு – கால் கப்
துவரம் பருப்பு – 1 பிடி
பாசிப் பருப்பு – 2 டீஸ்பூன்
பச்சரிசி, புழுங்கலரிசி – தலா 2 பிடி
மிளகாய் வற்றல் – 5
இஞ்சி – சிறு துண்டு
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
எப்படிச் செய்வது?
பருப்பு வகைகளை ஒன்றாகவும் பச்சரிசி,புழுங்கலரிசியை ஒன்றாகவும் ஊறவையுங் கள். ஊறியதும் இவற்றுடன் வெங்காயம், இஞ்சி, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து அரையுங்கள். மாவு கொர கொரப்பாக இருக்கும்போது நறுக்கிவைத்துள்ள சுரைக்காயைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மாவை அடை மாவு பதத்துக்குக் கரைத்து, சூடான தோசைக்கல்லில் ஊற்றுங்கள். சுற்றிலும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் இருபுறங்களும் வேகவிட்டு எடுங்கள்.