

என்னென்ன தேவை?
பனீர் துண்டுகள் - ஒரு கப்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
மிளகுத் தூள் - இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
பச்சை மிளகாய் - 2 (நீளமாகக் கீறியது)
வெண்ணெய் - 50 கிராம்
தனியாப் பொடி – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாப் பொடி - ஒரு சிட்டிகை
தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகத் தூள் - ஒரு டீஸ்பூன்
தினை மாவு, சோள மாவு, அரிசி மாவு – தலா ஒரு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – அரை மூடி
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் மாவு வகைகள், உப்பு, மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள், ஒரு டீஸ்பூன் தனியாத் தூள், தயிர் ஆகியவற்றைப் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்துப் பக்கோடா மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளுங்கள். அதில் பனீர் துண்டுகளைப் போட்டு பத்து நிமிடங்கள் மூடிவையுங்கள். பிறகு எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
வேறொரு வாணலியில் வெண்ணெய்யைப் போட்டு உருகியதும், கறிவேப்பிலை, சீரகத் தூள், கீறிய பச்சை மிளகாய், மீதியுள்ள மிளகுத் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்துக் கிளறுங்கள். பொரித்த பனீர் துண்டுகளை அதில் போட்டுப் புரட்டி, மல்லித் தழை தூவி எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறுங்கள்.