

என்னென்ன தேவை?
மிளகாய் – 2-3
மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
மல்லி, சீரகம், ஓமம், வெந்தயம், துவரம் பருப்பு, பெருங்காயம் – தலா ஒரு டீஸ்பூன்
வேப்பம்பூ – ஒரு டேபிள் ஸ்பூன்
பூண்டு – 25 பல்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
தாளிப்பு வடகம் – பாதி உருண்டை
கண்டந்திப்பிலி – 4 குச்சி
புளி – நெல்லிக்காய் அளவு
மாங்காய் வற்றல் – 4
கத்தரி வற்றல் – 6
சுண்டைக்காய் வற்றல் – 10
மணத்தக்காளி வற்றல் – ஒரு டேபிள் ஸ்பூன்
வெல்லம், கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மிளகாய், மல்லி, மிளகு, துவரம் பருப்பு ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளுங்கள். ஓமம், வெந்தயம், சீரகம், கண்டந்திப்பிலி ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்துக்கொள்ளுங்கள். வறுத்தவற்றைத் தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.
மண்சட்டியில் எண்ணெய் விட்டு, தாளிப்பு வடகம், பூண்டு, மாங்காய் வற்றல் தவிர்த்த மற்ற வற்றல்கள், வேப்பம்பூ, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள், மாங்காய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். குழம்பு கொதித்துவரும்போது அரைத்த விழுது, வெல்லம் இரண்டையும் சேருங்கள். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கிவிடுங்கள். காய்ச்சல் விட்ட மறுநாள் இந்தக் குழம்பு வாய்க்கு இதமாக இருக்கும்.