

ஒவ்வோர் ஆண்டும் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் தொடங்கிவிடுகிறது. சட்டென மாறும் வானிலைக்கு நம் உடல் ஈடுகொடுக்க வேண்டும் என்றால் ஆரோக்கிய உணவு அவசியம். வாரத்தில் சில நாட்களாவது அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பார்வதி கோவிந்தராஜ். எளிதில் செய்யக்கூடிய சில மருத்துவ உணவு வகைகளைச் செய்ய அவர் கற்றுத்தருகிறார்.
பிரண்டை சூப்
என்னென்ன தேவை?
பிரண்டை – ஒரு கட்டு
தக்காளி – 2 அல்லது 3
பச்சை மிளகாய் – 1
சின்ன வெங்காயம் – 6
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – 2
மல்லித்தழை – சிறிதளவு
வெள்ளை மிளகுத் தூள்
– அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எப்படிச் செய்வது?
பிரண்டையைத் தோல் நீக்கிப் பொடியாக வெட்டிக்கொள்ளுங்கள். வெங்காயத்தையும் தக்காளியையும் இரண்டிரண்டாக நறுக்கிக்கொள்ளுங்கள். மிளகுத் தூள் தவிர மற்றவை அனைத்தையும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு அடுப்பில் வையுங்கள். மூன்று விசில் வந்ததும் இறக்கிவையுங்கள். சூடு ஆறியதும் குக்கரில் உள்ளதை மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றியெடுத்து, வடிகட்டி மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறுங்கள். விரும்பினால் சிறிது தேங்காய்ப் பால் சேர்த்துக்கொள்ளலாம். பிரண்டைக்கு வாயுவை நீக்கும் குணமுண்டு.