கமகமக்கும் காய்கறி விருந்து: சௌசௌ அல்வா

கமகமக்கும் காய்கறி விருந்து: சௌசௌ அல்வா
Updated on
1 min read

என்னென்ன தேவை?

சௌசௌ பெரியது – 1

மைதா மாவு – 1 கப்

சர்க்கரை – இரண்டரை கப்

ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்

பாதாம் பருப்பு – 4

நெய் – முக்கால் கப்

பச்சை நிற ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

சௌசெளவைத் தோல்சீவி நறுக்கி வேகவிட்டு நன்கு மசித்துக்கொள்ளுங்கள். மைதா மாவில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்விட்டு வறுத்துக்கொள்ளுங்கள். அடி கனமான வாணலியில் சர்க்கரையைக் கரைத்து, பாகு பதம் வந்ததும் பச்சை ஃபுட் கலர் சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் மசித்து வைத்துள்ள சௌசௌவைச்சேர்த்து, கைவிடாமல் நன்றாகக் கிளறிக்கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் வறுத்து வைத்துள்ள மைதாவைச் சேர்த்துக் கிளறுங்கள். சிறிது சிறிதாக நெய்விட்டுகைவிடாமல் கிளறிக்கொண்டே இருங்கள். அதனுடன் ஏலக்காய்த் தூள் சேர்த்து அல்வா வாணலியில் ஒட்டாத பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். அவற்றின்மேல் நறுக்கிய பாதாம் பருப்பைத் தூவி அலங்கரித்துப் பரிமாறுங்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in