Published : 26 Jan 2025 09:29 AM
Last Updated : 26 Jan 2025 09:29 AM
வெறும் புற்களையும் புதர்களையும் சிறு தாவரங்களையும் கொண்ட சதுப்பு நிலங்கள் (பள்ளிக்கரணை), சுரபுன்னை மரங்கள் அடர்ந்த நீர் வழித் தடங்களைக் கொண்ட அலையாத்திக் காடுகள் (பிச்சாவரம்) என இரண்டு வகையுமே தமிழ்நாட்டில் உண்டு. இதில் இரண்டாம் வகை சதுப்பு நிலத்தையே முழுவதும் கதைக் களமாகக் கொண்டு, ஒரு ரொமாண்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகைப் படம் உருவானால் அது எவ்வளவு மயக்கி இழுக்கும்!
அதுவும் பல லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்த ஒரு நாவலை அதன் உணர்வும் காட்சி விவரிப்பும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே திரைமொழியில் வடித்தெடுத்தால்? அந்தத் திரைப்படம் கதாநாயகியை முதன்மைப்படுத்தியிருந்தால்? அதுதான், நெட்ஃபிளிக்ஸில் கிடைக்கும் ‘வேர் தி க்ராடாட்ஸ் ஸிங்?’ (Where the Crawdads sing?).
இது 2022இல் வெளியான திரைப்படம். டெலியா ஓன்ஸ் (Delia Owens) என்கிற அமெரிக்கச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், இயற்கை அவதானிப்பாளர் இதே பெயரில் எழுதிய நாவலால் விமர்சகர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டார். அந்த நாவலின் மீதான எதிர்மறை விமர்சனங்களே அதன் விற்பனை வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
தந்தை ஒரு குடிநோயாளி. அதன் காரண மாகவே குடும்பத்தினரைக் கண்மண் தெரியாமல் தாக்குகிறான். தாக்குப்பிடிக்க முடியாமல், மனைவி, மகன் என அனைவரும் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். மகளாகிய கதாநாயகி மட்டும், தந்தையின் வன்முறையிலிருந்து தப்பிக்கத் தன் வீட்டை ஒட்டி இருக்கும் சதுப்புநிலக் காட்டில் அடைக்கலமாகி வசிக்கத் தொடங்குகிறாள்.
அவளது மர்மமான வாழ்க்கை காரணமாகவே அவளைச் ‘சதுப்புநிலப் பெண்’ என மக்கள் அழைக்கிறார்கள். அவளது வாழ்வில் காதலும் கொலையும் அடுத்தடுத்து வருகின்றன. ஏன், எதற்கு, அவள் தண்டிக்கப்பட்டாளா என்பதை அறிய அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இல்லை.. இல்லை.. ஒரு நாவலைத் திரையில் காண வேண்டும். - ஜெ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT