

ஃபரூக் ஜே.பாஷா
தமிழில் வெளியான ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர், ஃபரூக் ஜே.பாஷா. சிம்புவின் ‘பத்து தல’, செல்வராகவன் நடித்த ‘பகாசூரன்’, விஜய் ஆண்டனி நடித்த ‘ரோமியோ’ உள்பட சில படங்களில் பணியாற்றியுள்ள இவர் ஒளிப்பதிவு செய்த ‘குற்றம் புரிந்தவன்’ வெப் தொடர், சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: ‘குற்றம் புரிந்தவன்’ வெப் தொடரின் திரைக்கதை முழுவதும் இயல்புத் தன்மையும், உளவியல் ஆழமும் கொண்டதாக இருந்தது; அதுவே ஒளிப்பதிவின் காட்சியமைப்பைத் தீர்மானிக்க முக்கிய காரணமாக அமைந்தது. இந்த தொடர் இந்த அளவு பாராட்டுகளைக் குவிக்கும் என நினைக்க வில்லை. எல்லோரும் என் பெயரைக் குறிப்பிட்டுப் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
பொதுவாகத் திரைப்படங்களுக்கும், வெப் தொடர்களுக்கும் ஒளிப்பதிவில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. படத்தில் இருக்கும் ஹீரோயிஸம், உச்சக்கட்டங்கள் எதுவும் சீரிஸில் இருக்காது. அதில், இயல்பான டிராமா இருக்கும். இந்தக் கதை, குற்றம் புரிந்தவனின் மனநிலை சம்மந்தப்பட்டது. அதைத் திரையில் கொண்டு வர, முழுவதும் க்ரே டோனில், நிஜத்தில் ஒரு ரூமில் எவ்வளவு வெளிச்சம் இருக்குமோ அதே போல் ஒளிப்பதிவு செய்தோம்.
இப்போது அதற்குப் பாராட்டுக் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பெரிய பீரியட் படத்தில் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு. நல்ல திரைக்கதை, நல்ல டிராமா படங்களில் அடுத்தடுத்து வேலை பார்க்க ஆசை. ‘குற்றம் புரிந்தவன்’ வெப் தொடருக்குப்பிறகு நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இயக்குநரின் கனவை அவர் நினைத்தது போல், ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி திரையில் கொண்டு வர வேண்டும் என்பதே விருப்பம். இவ்வாறு ஃபரூக் ஜே.பாஷா கூறினார்.