

ச்‘தி இந்து நாடக விழா’ 2005ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, முதன்முறையாக அதில் தமிழ் நாடகங்களும் இணைந்திருக்கின்றன. இந்த முயற்சி, தமிழ் நாடக ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. ‘ஆயிரத்தியொரு இரவுகள்’, ‘முந்திரிக்கொட்ட’, ‘வண்டிச்சோடை’ ஆகிய மூன்று நாடகங்களும் இந்த நாடக விழாவில் களமிறங்குகின்றன.
ஆயிரத்தியொரு இரவுகள்
நாடக ஆசிரியர், இயக்குநர் : வினோதினி வைத்தியநாதன்
நாடகக்குழு : ‘தியேட்டர் ஜீரோ’
‘1001 அரேபிய இரவுகள்’ கதைக்குப் பெரிய அறிமுகம் தேவையில்லை. அரசன் ஷாரியரிடம் இருந்து தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக 1001 இரவுகளைக் கதை சொல்லிக் கழிக்கிறாள் ஷாரஸத். அவள் சொன்ன கதைகளையெல்லாம் இணைத்து ஒரு புதுமையான ‘ஆயிரத்தியொரு இரவுகள்’ நாடகத்தை உருவாக்கியிருக்கிறார் நாடக இயக்குநர் வினோதினி வைத்திய நாதன். அதிசயங்கள், மாயாஜாலங்கள், விசித்திரங்கள் நிரம்பியதாக இந்நாடகத் தின் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக் கின்றன. அத்துடன், சமகால பிரச்சினை யான ஆண்-பெண் உறவில் இருக்கும் பாலின அரசியலையும் வித்தியாசமான கோணத்தில் இந்த நாடகம் அணுகியிருக் கிறது. அதேமாதிரி, நையாண்டிக்கும், நகைச்சுவைக்கும் இந்த நாடகத்தில் குறைவிருக்காது.
முந்திரிக்கொட்ட
நாடக ஆசிரியர்: சுனந்தா ரகுநாதன்
இயக்குநர்: அனிதா சந்தானம்
நாடகக்குழு: குடுகுடுப்பைக்காரி
பரங்கிப்பேட்டை என்னும் கடலோர கிராமத்தில் உப்பளத் தொழிலாளி பவுனும், அவளுடைய 12 வயது மகன் ‘கேபி’யும் புதிதாகக் குடியேறு கிறார்கள். இவர்கள் இரண்டு பேரின் வாழ்க்கையையும் இந்த நாடகம் பின் தொடர்கிறது. இந்த நாடகத்தில், ‘முந்திரிக் கொட்ட’ யாரென்றால், பவுனுடைய மகன் ‘கேபி’தான். ஒரு தவறான உலகத்தில் எப்படி சரியான முடிவை எடுக்க முடியும் என்ற கேள்வியைக் கேட்கிறான் ‘முந்திரிக்கொட்ட’ . இந்நாடகத்தின் கதைக் களம் தீவிரமானதாகத் தெரிந்தாலும் நகைச்சுவைக்கும் சுவாரஸ்யத்துக்கும் குறைவிருக்காது.
வண்டிச்சோடை
நாடக ஆசிரியர்: ந.முத்துசாமி
இயக்குநர்: ஆர்.பி.ராஜநாயஹம்
நாடகக்குழு: கூத்துப்பட்டறை
தமிழ் நாடக உலகின் முக்கியமான ஆளுமையான ந.முத்துசாமி 1968-ல் எழுதிய நாடகம் இது. இந்த நாடகம் அடித்தட்டு தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சினைகளைப் பேசுவதுடன், குரு - சிஷ்ய அமைப்பையும் பற்றி சில வலிமை யான கேள்விகளைக் கேட்கிறது. இந்திய பாரம்பரிய மருத்துவ முறையைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருக் கும் இந்த நாடகத்தில் உருமாற்ற உத்தியும் கையாளப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் இருந்து முடிவுவரை இந்த நாடகம் பலவிதமான புதிர்களுடன் அற்புதமான கற்பனைவெளியில் பயணப் படவிருக்கிறது.