Last Updated : 06 Jun, 2019 01:43 PM

 

Published : 06 Jun 2019 01:43 PM
Last Updated : 06 Jun 2019 01:43 PM

6 ஆண்டுகளாக சதம்! - அசத்தும் அரசுப் பள்ளி

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில், தொடர்ந்து 6 ஆண்டுகளாக பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று அசத்துகின்றனர் மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குரல்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மலையாண்டிபட்டிணத்தில் 2005 முதல் செயல்படுகிறது அரசு உயர்நிலைப் பள்ளி. மொத்தம் 3.3 ஏக்கர் பரப்பில், 12 வகுப்பறைகளுடன் அமைந்துள்ள இப்பள்ளியில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த,  ஏழை, நடுத்தர மாணவ, மாணவிகள் 300 பேர் பயின்று வருகின்றனர். 6 முதல் 10-ம் வகுப்பு வரை செயல்படும் இங்கு 11 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஒத்துழைப்பால்,  இப்பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்களைக் குவித்து வருகின்றனர். இங்கு பயிலும் ஆசிரியர்கள் சிலரும்,  அவர்களது குழந்தைகளை அதே பள்ளியில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆங்கில வழிக் கல்வி முறையும் உண்டு. இதனால், தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்கள் சிலரும், இப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பள்ளி வளாகத்தில் மாணவர்கள் உதவியால் நடப்பட்ட வேப்பம், புங்கன், மகிழம் என 200-க்கும் மேற்பட்ட மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.  தூய்மையான வகுப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுத்தமான கழிவறை என, தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் உள்ளது இப்பள்ளி.

பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.ஜெயபாலன் கூறும்போது, “ஒவ்வொரு மாணவர் மீதும் தனித்தனியே அக்கறை கொண்டுள்ளோம். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தினமும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்கு தனிப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொதுத் தேர்வில், தமிழ் வழியில்  பயின்ற மாணவி கே.சத்தியவாணி 461 மதிப்பெண் பெற்றார். தொடர்ந்து 6 ஆண்டுகளாக பொதுத் தேர்வில் 100 சத தேர்ச்சி அடைந்து வருகிறோம். மேலும், மனப்பாடக் கல்வி என்ற நிலையை மாற்றி, மாணவர்கள் புரிந்து கொண்டுப் பயிலும் அளவுக்கு பாடங்களை கற்பிக்கிறோம். தொடர் வெற்றியால், தனியார் பள்ளிகளில் பயின்ற 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள், எங்கள் பள்ளியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.

அதேசமயம், 2005-ம் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளியாக இருந்து வரும் இந்தப் பள்ளியை,  மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்கள் மற்றும்  பெற்றோரின் கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கை தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x