இலவசமாக டிராக்டர் வாகனம் வழங்கி மரக்கன்று நட உதவும் விவசாயி!

இலவசமாக டிராக்டர் வாகனம் வழங்கி மரக்கன்று நட உதவும் விவசாயி!
Updated on
1 min read

மதிப்பில்லாத ஆக்சிஜனை மனிதர்களுக்குத் தருபவை மரங்கள். ஆனால், மனிதர்களோ அவற்றை வெட்டி வீழ்த்துவதில்தான் கவனம் செலுத்துகின்றனர்.  சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மரங்களை அழித்துவிட்டோம்.

இந்த நிலையில், பல இடங்களிலும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டுவைக்கின்றனர். ஆனாலும்,  அவற்றை முறையாகப் பராமரிப்பதில் கவனம் செலுத்தப்படுவதில்லை. இந்த நிலையில், உடுமலை விவசாயி ஒருவர், தனக்குச் சொந்தமான டிராக்டரில் குழி எடுக்கும் கருவியைப் பொருத்தி, மரக்கன்றுகளை நட இலவசமாய் உதவுகிறார்.

இந்தக் கருவி மூலம் ஒரு அடி அகலம், 2 அடி ஆழம் வரை குழி தோண்டமுடியும். இதற்கான ஆட்களைத் தேடி அலைய வேண்டிய அவசியமமில்லை.  10 நொடிக்கு ஒரு குழி வீதம் தோண்ட முடியும். இதனால், மரக்கன்றுகள் நடும் பணி எளிமையாக்கப்படுகிறது.

marakkandru-2jpgகுமாரசாமி

வழக்கமாக,  இந்த வசதியை வணிக ரீதியில் பயன்படுத்துவோர், ஒரு குழி தோண்ட ரூ.16 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இந்தக் கருவி மூலம் அனைத்து வகையான மரக்கன்றுகளையும் நடவு செய்யலாம். உடுமலை அடுத்த சின்னவீரம் பட்டியைச் சேர்ந்தவர் தான் அந்த விவசாயி குமாரசாமி.

தனது விவசாயத் தேவை போக, எஞ்சிய நேரத்தில் அரசு அல்லது தன்னார்வலர்கள் சார்பில் மரக்கன்று நட, தனது டிராக்டரை இலவசமாக கொடுத்து உதவுகிறார். இதுவரை சுமார் 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

“கோவை, மேட்டுப்பாளையம், காரமடை, உடுமலை பகுதிகளில் வனத் துறையினருடன் இணைந்து, மரக்கன்றுக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. சமூக நலனில் அக்கறை உள்ளவர்களுக்கு, இலவசமாக வாகனத்தை கொடுத்து உதவி வருகிறேன். மரக்கன்றுகள் நட குழிதோண்ட விரும்பும் அரசு நிறுவனங்கள், பள்ளிகள், தன்னார்வ அமைப்புகள் ஆகியோர்,  9884630217 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்” என்றார் குமாரசாமி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in