

குத்தூசி குருசாமி தொடர்பான கட்டுரையில், ‘‘எழுத்துச் சீர்திருத்தத்தை முதன்முதலாகப் பேசியவர் குருசாமி. அதனை ‘குடிஅரசு’ இதழில் முதன்முதலாகப் பயன்படுத்தவும் செய்தார். குருசாமி முன்வைத்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, அவரது மறைவுக்குப் பிறகு, 1978-ல் எம்ஜிஆர் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது’’ என்று தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ‘பகுத்தறிவு’ இதழில் (30.12.1934) பெரியார் அறிவித்து, 13.01.1935 ‘குடிஅரசு’ இதழில் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
பெரியார் நூற்றாண்டையொட்டி, தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆணையிலேயே (பொதுத் (செய்தி மக்கள் தொடர்பு) துறை செய்தி வெளியீடு எண்:449. நாள்: 19.10.1978.) தெளிவாக, திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. ‘பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு ஏற்று, அதனை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது’ என்று ஆணையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
- கி.வீரமணி, தலைவர். திராவிடர் கழகம்.
இயலாமையின் வெளிப்பாடா?
இந்தித் திணிப்புக்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் காரணம் என்று குற்றம்சாட்டப்படும் சூழலில், “இந்திக்கு முக்கியத்துவம் தரப் பரிந்துரைக்கவில்லை” என்ற அவரது விளக்கத்தை 25-ம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் வாசித்தேன். “ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அலுவல் சார்ந்த தலைவராக உள்துறை அமைச்சர் இருப்பார். அப்படித்தான் நான் இருந்தேன். இந்தக் குழுவில் உறுப்பினராக இருந்த 30 பேரில் 28 பேர் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
குழுவின் பெரும்பான்மையானோர் முடிவை நிராகரிப்பதற்கோ, மாற்றுவதற்கோ அலுவல் சார்ந்த தலைவருக்கு அதிகாரம் இல்லை” என்பது அவரது விளக்கம். 30 உறுப்பினர்களில் 28 பேர் இந்தி பேசும் மாநிலத்தவர்கள் இடம்பெற எப்படி அனுமதித்தனர்? இந்தக் குழுவை அமைக்கும் அதிகாரம் அமைச்சர் அல்லது சபாநாயகர் யாரிடம் உள்ளது என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இதுகுறித்து ஆராயாமலும், கேள்வி கேட்காமலும் இருக்கும் வரை நாடாளுமன்றத்தின் ஆதிக்கத் தாக்குதலுக்கு நாம் இரையாகிக்கொண்டுதான் இருப்போம்.
- க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.
பாராட்டுகள்!
தமிழ்நாட்டில் உள்ள அரசு நூலகங்களுக்குப் போட்டித் தேர்வு குறித்த பருவ இதழ்கள் அதிகளவில் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இது அனைத்து கிராமப்புற நூலகங்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும். பொது நூலகங் களுக்குப் புத்தகக் கொள்முதல் அதிகளவில் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகின்றன. இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- மருதூர்.செம்மொழி மணி, வேதாரண்யம்.
வரலாற்று நம்பிக்கை
ஏப். 25-ல் வெளியான, ‘தார்மிக அடிப்படை அறம் இன்னமும் மிச்சம் இருக்கிறதுதானே?’ தலையங்கம் படித்தேன். அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகி, எல்லாம் முடிந்தது என்ற நிலையில், உச்ச நீதிமன்றம் அவ்வழக்குக்கு உயிர் கொடுத்திருக்கிறது. தேசிய அவமானமாகக் கருதப்பட்ட இச்சம்பவத்துக்கு, தண்டனை கிடைக்காமலே போய்விடுமோ என்று எண்ணியிருந்த மதச்சார்பற்ற தேசியவாதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் உயிர்ப்பு ஒரு வரலாற்று நம்பிக்கை!
- முருகன் கோவிந்தசாமி, புதுச்சேரி.