

அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேங்கைவயல், பெரும்பத்து ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் வாக்கு அளிக்காமல் புறக்கணித்தது வருத்தத்துக்கு உரியது. அரசு நிர்வாகத்தின் மீதான அதிருப்தி காரணமாகக் குடியாட்சியின் அடிப்படைச் செயல்பாட்டிலிருந்து மக்கள் விலகி நிற்கும் இத்தகைய சூழல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
மக்கள் அரசை உருவாக்குவதையும், அரசு நிர்வாகத்தில் பங்கேற்பதையும் தேர்தல் முறை சாத்தியப்படுத்துகிறது. ஒட்டுமொத்தச் சமூகம் அல்லது தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுவதற்காகக் குறிப்பிட்ட கட்சிக்கு மக்கள் வாக்கு அளிக்கின்றனர்.
விதிவிலக்காக, சில பிரச்சினைகளில் தாங்கள் கைவிடப்பட்டதைச் சுட்டிக்காட்டும்வகையில் அவர்கள் தேர்தலைப் புறக்கணிப்பதும் நிகழ்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மக்களின் தேர்தல் புறக்கணிப்பும் இத்தகையதுதான்.
அங்கு பட்டியல் சாதியினர் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் 2022இல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தக் குற்றச்செயலில் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் ஈடுபட்டதாக சிபிசிஐடி குற்றம்சாட்டியது, பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாகக் கட்டமைக்கக் காவல் துறை முயல்கிறது என்கிற விமர்சனத்துக்கு வழிவகுத்தது.