

கடந்த சில நாள்களாக சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் சிக்குன்குனியா, டெங்கு பாதிப்பு அதிகரித்துவருவதாகச் செய்திகள் வெளியான நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் அந்நோய்களுக்கான கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வலியுறுத்தி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
சிக்குன்குனியா நோயை ஏற்படுத்தும் டோகாவிரிடே (Togaviridae) வைரஸ் ஏடிஸ் எஜிப்டி (Aedes Aegypti) கொசுக்கள் மூலமாகப் பரவுவது 1952ஆம் ஆண்டு தான்சானியாவில் கண்டறியப்பட்டது. சாதாரண சளி, தொண்டை வலி, மூக்கடைப்பு தொடங்கிக் கடுமையான காய்ச்சல், மூட்டுவலி உள்ளிட்டவை இதற்கான முதன்மை அறிகுறிகளாக உள்ளன.
கடந்த ஆண்டு உலகம் முழுக்க ஏறக்குறைய 4,86,000 பேர் சிக்குன்குனியா பாதிப்புக்கு உள்ளானதாகவும், 229 பேர் உயிரிழந்ததாகவும் ஐரோப்பிய நோய்த் தடுப்பு - கட்டுப்பாட்டு மையம் கூறியது. 2024ஐவிட இந்நோயின் தாக்கம் அதிகமிருந்ததாக, அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.