

தமிழ்நாட்டில் விசாரணை நீதிமன்றங்களால் வழங்கப்படும் மரண தண்டனைகளில் பெரும்பாலானவை, மேல்முறையீட்டுக்குப் பின்னர் உயர் நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்படுவதாக வெளியாகியிருக்கும் செய்திகள் ஆறுதல் அளிக்கின்றன. மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்கிற குரல்கள் தொடர்ந்து ஒலித்துவரும் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து ஆக்கபூர்வமான சமிக்ஞை வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்தில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் ‘தி ஸ்கொயர் சர்க்கிள் கிளினிக்’ என்னும் அமைப்பு குற்றவியல் பாதுகாப்பு, தடயவியல், மரண தண்டனை வழக்குகள் போன்றவற்றைக் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. மரண தண்டனைக் கைதிகளின் சமூக-பொருளாதாரப் பின்னணிகள் பற்றிய தகவல்களையும் இந்த அமைப்பு வெளிக்கொண்டுவருகிறது.
இந்த அமைப்பு அண்மையில் வெளியிட்டிருக்கும் ‘இந்தியாவில் மரண தண்டனை: வருடாந்திரப் புள்ளிவிவர அறிக்கை 2025’ மரண தண்டனைக் கைதிகளின் நிலை, அவர்கள் தொடர்பான வழக்குகளை விரிவாக ஆய்வுசெய்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில் விசாரணை நீதிமன்றங்கள் விதிக்கும் தண்டனைக்கும், மேல்முறையீட்டுக்குப் பின்னர் உயர் நீதிமன்றம் எடுக்கும் முடிவுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தெரியவருகின்றன.