

நாடு முழுவதும் மது, போதைப் பொருள்களின் பழக்கம் அதிகரித்துவருவது மிகுந்த கவலை அளிக்கிறது. இத்தகைய சூழலில், தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கையை தவெக தலைமையிலான அரசு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
கூடவே, மதுபானம் அல்லாத போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்துவதிலும் அரசு தீவிரக் கவனம் செலுத்துவதற்கான அவசியம் உருவாகியிருக்கிறது. போதையால் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலும் வட மாநிலங்களே முன்னணியில் இருந்த நிலையில், 2024 நிலவரப்படி 313 மரணங்களோடு தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.
அரசாங்கத்தால் நடத்தப்படும் ‘டாஸ்மாக்’ மதுபானக் கடைகள் நம் கண்களுக்குத் தெரிகிற போதைக்கான களம் என்றால் பான், குட்கா, புகையிலைப் பொருள்கள், போதை ஊசிகள், போதை தரும் குளிர்பானங்கள் போன்றவை மக்களின் கண்களுக்குத் தெரியாத பெரிய வலைப்பின்னலைக் கொண்டவை.
பான், குட்கா போன்ற போதைப் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் அவை தங்குதடையின்றிக் கிடைப்பதை மறுப்பதற்கில்லை. 2024இல் போதைப்பொருள் பயன்பாட்டின் தேசிய விகிதம் 1.2%ஆக இருந்த நிலையில், தமிழகம் 35ஆவது இடத்தில் (0.1%) இருப்பதாக மத்திய அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்தது.