

தன் அதிரடி நடவடிக்கைகள் மூலம் பல்வேறு நாடுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்திவரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், உலகின் முக்கியமான அமைப்புகளிலிருந்து அமெரிக்காவை வெளியேற வைத்திருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. குறிப்பாக, உலக சுகாதார நிறுவனத்திலிருந்து முற்றிலுமாக அமெரிக்கா வெளியேறியிருப்பதால், சர்வதேச அளவிலான சுகாதாரத் திட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்னும் அச்சம் எழுந்திருக்கிறது.
அமெரிக்க நலனுக்கே முன்னுரிமை என்னும் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் டிரம்ப், ஐக்கிய நாடுகளின் அவை உருவாக்கிய முக்கிய அமைப்புகளிலிருந்து வெளியேறுவதில் தீவிரம் காட்டுகிறார். தனது முந்தைய ஆட்சிக்காலத்திலேயே இதில் முனைப்பு காட்டினார்.
குறிப்பாக, கோவிட் -19 பெருந்தொற்றுக் காலத்தில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே அதுகுறித்து சீனாவிடம் முழுமையான தகவல்களைக் கேட்டுப்பெறவோ, உரிய விசாரணை நடத்தவோ உலக சுகாதார நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை எனக் குற்றம்சாட்டிய டிரம்ப், அந்த அமைப்புக்கு அளித்துவந்த நிதியைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகவும் அறிவித்தார். தற்போது அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா முற்றிலுமாக விலகியிருக்கிறது.