

புதிய நிதியாண்டின் (2026-27) தொடக்கமான ஏப்ரல் 1 முதல், இந்தியா முழுவதும் சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக், யுபிஐ ஆகியவற்றின் மூலமாக மட்டுமே சுங்கக் கட்டணம் செலுத்துவதை நடைமுறைப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிஜிட்டல்மயமாக்கத்தின் ஒரு பகுதியாக இது அறிமுகப்படுத்தப்பட்டாலும், பணத்தை நேரடியாகச் செலுத்தும் நடைமுறையை முற்றிலும் கைவிடுவது சரியான அணுகுமுறையா என்கிற கேள்வி எழுகிறது.
இந்தியாவில் சாலைகள், பாலங்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்க அடிப்படையாக இருப்பது, இந்தியச் சுங்கச்சாவடி சட்டம் 1851. பின்னாள்களில், தேசிய நெடுஞ்சாலைகள் வளர்ச்சித் திட்டம் (NHDP) 1998இல் தொடங்கப்பட்டது.