

இந்தியாவில் 2025-26ஆம் கல்வியாண்டில் 4,791 பள்ளிகள் மூடப்பட்டதாக வெளியாகியுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளிகள் மூடப்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து நிலைமை மோசமடையாமல் தடுக்கும் பணிகளில் மாநில அரசுகள் இறங்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது.
மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி தகவல் அமைப்பின் (UDISE+) அறிக்கையில்தான் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. நாள்தோறும் 13 பள்ளிகள் என்கிற வீதத்தில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. இவற்றில் பெரும்பாலானவை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள். அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 2,426 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
தெலங்கானாவில் 1,392, மேற்கு வங்கத்தில் 568, ஆந்திரத்தில் 474, கர்நாடகத்தில் 281 எனப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 369 பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. அதேநேரத்தில், பிஹாரில் 946 பள்ளிகள், சத்தீஸ்கரில் 234, டெல்லியில் 87 பள்ளிகள் அதிகரித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், இந்த மாநிலங்களில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பது எதிர்மறையான சமிக்ஞை.
மாணவர் சேர்க்கை குறைவதே பள்ளி மூடலுக்கு முக்கியக் காரணியாக இருந்திருக்கிறது. 2025-26இல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டிருப்பதாக அறிக்கை பதிவுசெய்துள்ளது.