

உச்ச நீதிமன்றத்தில் 3,525 பொதுநல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மக்களவையில் மத்திய சட்டத் துறை அமைச்சகம் அண்மையில் தெரிவித்துள்ளது. இவற்றில் சில வழக்குகள் 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் ஏறக்குறைய 80,000 வழக்குகள் காத்திருப்பில் உள்ள நிலையில், நீண்ட காலமாகத் தீர்வு காணப்படாத பொதுநல வழக்குகள் கூடுதல் சுமை ஆகின்றன.
தங்கள் பிரச்சினைகளுக்காக நீதிமன்றத்தை அணுகும் சூழலோ, விழிப்புணர்வோ இல்லாத தரப்பினருக்காக இன்னொருவர் பொதுநல வழக்கு (Public Interest Litigation-PIL) தொடுக்கும் வழிமுறையை வி.ஆர்.கிருஷ்ண ஐயர், பி.என்.பகவதி உள்ளிட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் முன்மொழிந்தனர் எனலாம்.
நாட்டின் முதல் பொதுநல வழக்கான ‘ஹூசைனாரா காட்டூன் எதிர் பிஹார் மாநில அரசு’ (1979) மூலம் சிறையில் மிக மோசமாக நடத்தப்பட்ட பல விசாரணைக் கைதிகளுக்கு நிவாரணம் கிடைத்தது.