

வியட்நாமின் சுற்றுலாத் தலமான ஃபு குவோக் தீவு அருகே, அதிவேகப் படகு கவிழ்ந்து 10 தமிழர்கள் உள்ளிட்ட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சுற்றுலாத் தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியிருக்கிறது.
ஜூலை 11 அன்று, தெற்கு வியட்நாமின் ஃபு குவோக் தீவுப் பகுதியில் உள்ள மே ரட் ங்கோய் என்னும் சிறு தீவுக்கு அருகே, அதிவேகச் சுற்றுலாப் படகு கடலில் கவிழ்ந்தது. பயணம் தொடங்கிய 400 மீட்டர் தொலைவில், கடல் கொந்தளிப்பு, பலத்த காற்று ஆகியவற்றின் காரணமாகப் படகு கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
‘ஓஷன் பேர்ல் ஐலேண்ட்’ என்கிற நிறுவனத்தால் இயக்கப்பட்ட இந்தப் படகில் இருந்தவர்கள், இந்தியாவைச் சேர்ந்த பன்னாட்டுத் திறன்பேசித் தயாரிப்பு நிறுவனத்தால் ஊக்கச் சுற்றுலா அடிப்படையில் வியட்நாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.
உயிரிழந்தவர்களில் 10 பேர் தமிழர்கள். பலமான அலைகள் காரணமாகப் படகின் வேகத்தைக் குறைக்க வேண்டியிருந்ததாகவும், அது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியதாகவும், அவர்கள் குழப்பமடைந்து ஒரு பக்கமாக நகர்ந்ததால் படகின் சமநிலை குலைந்து கவிழ்ந்ததாகவும் இச்சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.