

கோடைக்காலம் தொடங்கினாலே வெப்பம், வறட்சியால் ஏற்படக்கூடிய தீ விபத்து அபாயம் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கிறது.
அதுவும், இந்த ஆண்டு வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருக்கிற நிலையில், அந்த சவாலைத் திறம்பட எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அண்மையில் திருப்பத்தூர் மாவட்டத்தின் ஏலகிரி மலையில் உள்ள பொன்னேரி காப்புக்காடுகளில் ஏறக்குறைய 2 ஹெக்டேர் பகுதியில் வளர்ந்திருந்த புற்கள் கருகித் தீக்கிரையாகின.
இம்மாதத் தொடக்கத்தில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் ஒரு பிரிவில் நேரிட்ட தீ விபத்து, அதன் பாதுகாப்புத் தரநிலை குறித்த கேள்வியை எழுப்பியது.
இந்தச் சம்பவங்கள், தீ விபத்து தடுப்புச் செயல்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. ஒவ்வோர் ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மின்சாரக் கோளாறுகளால் தீ விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
கோடையில் மின்விசிறி, குளிர்சாதனக் கருவி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரிப்பது மின் மிகைச்சுமை, மின்கசிவு (short circuit) ஆகியவற்றை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.