

வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் காலாவதி ஆகியிருப்பது சர்வதேச அளவில் புதிய இடர்ப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு புதிய ஆயுதப் போட்டிக்கான அச்சத்தையும் உருவாக்கியிருக்கிறது.
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கப் படைகள் அணுகுண்டு வீசித் தாக்குதல் நடத்தி லட்சக்கணக்கானோரைக் கொன்றதை உலகம் இன்னும் மறந்துவிடவில்லை.
வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடியாக மோதிக்கொள்ளவில்லை என்றாலும், தங்கள் நட்பு நாடுகள், பல்வேறு வகைகளில் தங்களைச் சார்ந்திருக்கும் நாடுகளின் அரசியல் சூழலைப் பயன்படுத்திப் பனிப்போரில் ஈடுபட்டு வந்ததை மறுக்க முடியாது.
இரண்டு நாடுகளும் அணு ஆயுதப் போரில் எப்போது வேண்டுமானாலும் இறங்கலாம் என்கிற சூழலில், 1982இல் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ரொனால்டு ரீகன் இது தொடர்பான யோசனையை முன்வைத்தார். அதன் தொடர்ச்சியாக, ஸ்டார்ட் 1 (வியூகரீதியிலான ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம்) அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில், 1991 ஜூலை 31 அன்று கையெழுத்திடப்பட்டு, 1994 டிசம்பர் 5இல் நடைமுறைக்கு வந்தது.