

கோவை மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கும் சாகும்வரை சிறைத்தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை துரிதமாக நடத்தப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
2025 நவம்பர் 2ஆம் தேதி இரவு, கோவை சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள புதர்க்காட்டில் 25 வயது இளைஞர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அவருடன் காரில் இருந்த 20 வயது மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார்.
இக்குற்றத்தில் ஈடுபட்டதாக, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த கருப்பசாமி என்கிற சதீஷ் (30), அவருடைய தம்பி காளீஸ்வரன் என்கிற கார்த்திக் (21), மதுரையைச் சேர்ந்த இவர்களது உறவினர் குணா என்கிற தவசி (20) ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் துறைக்கு அறிவுறுத்தினார். அதன்படி டிசம்பர் 1இல் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை விசாரணைக் குழு சமர்ப்பித்தது.