

மாணவியருக்கும் பணிபுரியும் பெண்களுக்கும் மாதவிடாய் விடுப்பு அளிப்பதைச் சட்டமாக்கும்படி கோரிக்கைவிடுத்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
‘மாதவிடாய் விடுப்புச் சட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட்டால் அது பெண்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது விவாதத்துக்கு வழிவகுத்திருக்கிறது.
மாதவிடாய் விடுப்பு என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் ‘கண்ணியத்துடன் வாழ்வதற்கான அடிப்படை உரிமை’ என்கிற வகைமைக்குள் பொருந்தும் எனவும், பெண்களின் மகப்பேறு நலன் சட்டத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்பும் எனவும் குறிப்பிட்டுப் பொதுநல மனுவை வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான இருவர் அமர்வு, மாதவிடாய் விடுப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டால், நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்தத் தயங்கும் எனவும் ஆண்களுக்குத் தாங்கள் சமமில்லையோ என்கிற தாழ்வுமனப்பான்மையைப் பெண்களுக்கு ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தது.