

ஈரான் போர் காரணமாக, மேற்கு ஆசியாவில் பதற்றச் சூழல் நிலவுவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்படுமா என்கிற கேள்வி நாட்டின் கடைக்கோடிவரை வியாபித்துள்ளது. இந்தச் சூழலில் மக்களின் பதற்றத்தைத் தணிக்கும் வகையிலான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகிறது.
ஈரானுடனான அணு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக அமெரிக்கா நடத்திவந்த பேச்சுவார்த்தையில் முரண்பாடுகள் நீடித்துவந்த நிலையில், பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்திவருகின்றன.
பதிலடியாக, அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள், நிறுவனங்களைக் குறிவைத்து ஈரான் மேற்கொள்கிற தாக்குதல்களும் ஹார்முஸ் நீரிணையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் உலகப் பொருளாதாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றன.
போர் தொடங்கியதும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்கிற ஊகம் வேகமாகப் பரவியதால், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பங்க்குகளில் மணிக்கணக்கில் மக்கள் காத்து நின்றனர்.