

மேற்கு ஆசியாவில் போர் தீவிரம் அடைந்துள்ளபோதிலும் இந்தியாவில் சமையல் எரிவாயு, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய அரசு உறுதியளித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகப் பாதிப்பு, அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடு, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் 25இல் மத்திய அரசால் நடத்தப்பட்டது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோருடன் சில எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.
ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்தல், உள்நாட்டு எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுத்தல் உள்ளிட்டவற்றுக்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.