

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கைபேசிக் கட்டணத்தை 12% முதல் 15% வரை உயர்த்தக்கூடும் எனத் தொலைத்தொடர்பு – இணையம் தொடர்பான ‘சென்ட்ரம்’ காலாண்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.
2027ஆம் நிதியாண்டின் முதல் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் இந்த உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டால் வாடிக்கையாளர்களின் மாதாந்திரக் கைபேசிக் கட்டணம் கணிசமாக உயரும் எனவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புக்கான அடிப்படைக் கட்டமைப்புகளோடு பொதுத் துறை நிறுவனமாக பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) 2000இல் தொடங்கப்பட்டது. 2002இல் ‘செல்ஒன்’ கைபேசிச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இலவச ‘இன்கமிங்’ அழைப்புகள், நாடு முழுவதும் ‘ரோமிங்’ என இந்தியாவின் ஒரே சேவை நிறுவனமாக பிஎஸ்என்எல் இருந்தது. எளிய மக்களும் கைபேசியைப் பயன்படுத்த வேண்டும் என்கிற இலக்கோடு குறைந்த கட்டணச் சேவையை அது வழங்கிவந்தது.
பிஎஸ்என்எல் உருவாக்கிய கட்டமைப்பின் உதவியோடு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் இந்தியாவில் காலூன்றத் தொடங்கின.