

முதுகலை மருத்துவப் படிப்பு முடித்த பிறகு முறையான அறிவிப்பு ஏதுமின்றிப் பணிக்குத் திரும்பாத 1,420 அரசு மருத்துவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்திருக்கிறது. கடமையை மீறும் அரசு மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது தவிர்க்க முடியாதது.
அதே நேரம், அவர்கள் பணிக்குத் திரும்பாததற்கான காரணங்கள் ஆராயப்பட்டு அவை களையப்படுவதும் அவசியம். தமிழ்நாட்டில் அரசு இடஒதுக்கீட்டில் முதுகலை பயிலும் அரசு மருத்துவர்கள், ‘இரண்டு ஆண்டுகள் படிப்புக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்புவேன்; பணி ஓய்வு (60 வயது) வரை பணியில் நீடிப்பேன்’ என ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிக்கும் நடைமுறை உள்ளது.