

ஆந்திர மாநிலத்தில் கருவுறுதல் விகிதம் குறைந்துவருவதையும், முதியோரின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் தடுப்பதற்காக மூன்றாவது, நான்காவது குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தம்பதியருக்குத் தலா ரூ.30,000, ரூ.40,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒரு மாநிலம், இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் 1952இல் முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தேசியக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதைத் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மிகத் தீவிரமாகப் பின்பற்றின. 1960களில் இருந்து தமிழ்நாடு, கேரளத்தில் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் கிராமம்தோறும் தொடங்கப்பட்டன. இதன் மூலம் பெண்களுக்கு மகப்பேறு கால மருத்துவ உதவி, குடும்பக் கட்டுப்பாட்டுச் சிகிச்சை, ஆலோசனை போன்றவை முறையாக வழங்கப்பட்டன.
குறிப்பாக, 1980களில் தென் மாநில அரசுகள் கிராமம்தோறும் மருத்துவ முகாம்களை நடத்தி, கருத்தடைக் கருவிகள் இலவசமாகக் கிடைக்க வழிவகை செய்தன. அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மூலம் பிரசவத்துக்குப் பிந்தைய பாதுகாப்பும் வழங்கப்பட்டது.