

மத்தியப் பிரதேசத்தில் கடந்த நான்கு மாதங்களில் 27 புலிகள் உயிரிழந்திருப்பது கவலை அளிக்கிறது. இத்தகைய உயிரிழப்புகள் காட்டின் சமநிலை வெகுவாகச் சீர்குலைந்துவரும் ஆபத்தை உணர்த்துகின்றன.
மத்தியப் பிரதேசத்தின் கன்ஹா புலிகள் காப்பகத்தில் 8 வயது மதிக்கத்தக்க பெண் புலியும் 18 மாதங்கள் நிரம்பிய அதன் கடைசிக் குட்டியும் சில நாள்களுக்கு முன்பு இறந்தன. இதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே அந்தப் பெண் புலியின் மற்ற மூன்று குட்டிகளும் உயிரிழந்தன.
முதல்கட்ட உடற்கூறு ஆய்வில் அவற்றுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. உடலில் எந்தவிதக் காயங்களும் இல்லாதபோதும் ஐந்து புலிகளும் குறுகிய கால இடைவெளியில் மிகவும் பலவீனம் அடைந்து இறந்தது சர்ச்சைக்கு உள்ளானது.
விலங்குகளின் நோய் எதிர்ப்பு ஆற்றலை முழுமையாக அழிக்கும் ‘கேனைன் டிஸ்டெம்பர்’ வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம் என்னும் சந்தேகம் எழுந்தது.