

சாலைகள் / தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளாலும் பிற விலங்குகளாலும் நேரிடும் விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக நெறிமுறைகளை உருவாக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
2007இல் பஞ்சாப்பைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சாலையில் நடந்து சென்றபோது மாடு முட்டி உயிரிழந்தார். இதையடுத்து, அவருடைய மனைவி நிஷா இழப்பீடு கோரி பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில், 1988ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்ட விதிகள்-188இன்படி, ரூ.29.32 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசுக்குத் தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இழப்பீடு வழங்கும் உத்தரவை ரத்துசெய்தது. இதை எதிர்த்து அந்தப் பெண் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில்தான் மேற்கண்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.