

மேற்கு ஆசியப் போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கப் பல்வேறு நாடுகள் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன. அவற்றை உற்று நோக்குவதன் மூலம் மாற்று வழிகளைக் கண்டடைய இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது.
உலகக் கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியப் பங்களிக்கும் ஹார்முஸ் நீரிணை, ஈரான் போர் காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால், வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பல நாடுகள் நடைமுறைப்படுத்தி உள்ளன.
போக்குவரத்தில் எரிசக்தி விரயமாவதைத் தவிர்க்க, அரசு ஊழியர்கள் வாரம் நான்கு நாள்கள் மட்டும் அலுவலகம் செல்லும் திட்டத்தை பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகள் நடைமுறைப்படுத்தி உள்ளன. தனியார் துறையினர் வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்கப்படுகின்றனர்.
ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அரசு ஊழியர்களுக்கு மலேசிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில், முறையான க்யூஆர் குறியீடு பெறப்பட்ட வாகனங்களில் மட்டுமே ரேஷன் முறையில் பெட்ரோல், டீசல் நிரப்பப்படும்; இருசக்கர வாகனங்களுக்கு வாரத்துக்கு 5 லிட்டர்; கார், ஆட்டோக்களுக்கு வாரத்துக்கு 15 லிட்டர் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.