Published : 15 Sep 2020 07:44 AM
Last Updated : 15 Sep 2020 07:44 AM

அனைவருக்குமான தடுப்பூசிக் கொள்கையே உடனடித் தேவை

கரோனாவை எதிர்கொள்வதற்கான ஒரே நம்பிக்கையாக இருக்கும் தடுப்பூசி, கூடிய விரைவில் கண்டுபிடிக்கப்படுமோ இல்லையோ இந்த விஷயத்தில் சமத்துவம் கடைப்பிடிக்கப்படும் வகையில் எல்லோருக்குமான தடுப்பு மருந்துக் கொள்கை இந்தியாவுக்காக உருவாக்கப்பட வேண்டும். கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதென்பது ஒரு தொடரோட்டம் போன்றது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவர் மற்றொருவரிடம் தொடரோட்டக் கம்பை ஒப்படைப்பார். இறுதி எல்லையில் அதை வாங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. தடுப்பு மருந்தின் அவசியத்தைப் பற்றியும், அது உருவாக்கப்பட்டவுடன் திறம்படப் பயன்படுத்தப்பட வேண்டியது குறித்தும் உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் தேத்ரோஸ் அதனோம் கேப்ரியேஸஸ் சமீபத்தில் பேசியிருக்கிறார். தடுப்பு மருந்தின் ஆரம்பக் கட்டத்தில் சிலருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், போகப் போக அனைவருக்கும் தடுப்பு மருந்து செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தடுப்பு மருந்துத் தயாரிப்பின் தொடக்கக் கட்டத்தில், மருத்துவப் பணியாளர்களுக்காகவும் அதிக ஆபத்தில் உள்ள மூத்த குடிமக்கள், வேறு நோய்கள் கொண்டவர்கள் ஆகியோருக்காகவும் உற்பத்திசெய்யப்படுகிறது. தேத்ரோஸ் கூறியபடி, ‘சில நாடுகளில் எல்லா மக்களுக்கும் என்பதைவிட எல்லா நாடுகளிலும் சில மக்களுக்கு’ தடுப்பு மருந்து கிடைக்க அதன் தொடக்கக் கட்டத்தில் வழிவகுக்க வேண்டும். ஆரம்பக் கட்டத்திலும்கூட அந்தத் தடுப்பு மருந்தை வாங்கும் வசதியற்றவர்களுக்கு அரசு விலையின்றியோ, மிகக் குறைந்த விலையிலோ வழங்க வேண்டும். தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்வது முக்கியம். தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைப்பதில் இடைவெளி ஏற்பட்டால், கரோனா வைரஸ் நீடித்து நின்று மேலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

உண்மையில், தடுப்பு மருந்து தயாரானதும் இந்தியாவில் அனைவரையும் அது சென்றடைவதற்கான பணி மலைக்க வைக்கும் ஒன்றாக இருக்கும். அதற்கு முன்னதாக கரோனா தடுப்பு மருந்துக்கான கொள்கை ஒன்றை நம்முடைய அரசு வகுக்க வேண்டும்; தடுப்பு மருந்து உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், தடுப்பு ஊசி போடுதல் என்று தன் செயல்பாடுகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். யாருக்கு, எப்போது, எங்கே தடுப்பூசி போடுவது என்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தடுப்பு மருந்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உரிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டால்தான் இறுதிக் கட்டத்தின்போது அரசாங்கத்தால் தயார் நிலையில் இருக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x