Published : 01 Oct 2019 08:23 AM
Last Updated : 01 Oct 2019 08:23 AM
கிராமப்புற மக்களுக்கு ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்’ மூலம் அளிக்கும் ஊதியத்தை நுகர்வோர் விலை குறியீட்டெண்ணுடன் இணைத்து வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. தொழில் முதலீடு, வேலைவாய்ப்பு, சேமிப்பு, நுகர்வு என்று அனைத்தையும் ஊக்குவிக்க அடுத்தடுத்து புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அளித்துவரும் அரசு, கிராமப்புறங்களில் தொடர்ந்து நுகர்வு குறைந்துகொண்டே வருவதைச் சுட்டிக்காட்டும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையால் எச்சரிக்கையடைந்து இந்த முடிவை எடுத்திருக்கிறது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கிராமப்புற வேலைகளுக்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.178 மட்டுமே ஊதியமாகத் தரப்படுகிறது. இந்த ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாகப் பல தரப்பிலிருந்தும் எழுந்துவருகிறது. விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டெண் கடந்த முப்பதாண்டுகளாக உயர்த்தப்படவேயில்லை. இதனால், கிராமங்களிலிருந்து ஏராளமானோர் வேலை தேடி நகரங்களுக்குச் செல்கின்றனர்.
கிராமப்புற மக்களுடைய வாழ்க்கை முறை கடந்த முப்பதாண்டுகளில் வெகுவாக மாறிவிட்டது. ஆனால், அவர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டெண் தயாரிப்பவர்கள் அதைக் கணக்கில் கொள்வதில்லை. நகரங்களைப் போலவே கிராமங்களிலும் நுகர்பொருள்களைப் பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது. கல்வியறிவு பரவுவது, தொலைக்காட்சி விளம்பரங்கள், சமகாலத் தேவைகள் இதற்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. இந்த நிலையில் இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு முப்பதாண்டுகளுக்கு முன்னால் கிராமங்களில் மக்கள் எப்படி நுகர்ந்தனரோ அதையே அடிப்படையாக வைத்து ஊதியம் நிர்ணயிக்கப்படுவதால் அது மிகமிகக் குறைவாக இருக்கிறது.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த எல்லா வகைகளிலும் முயன்றுபார்த்த அரசு, நாட்டின் முதுகெலும்பு கிராமப்புறப் பொருளாதாரம்தான் என்ற உண்மையை நெருங்கியிருக்கிறது. கிராம மக்களுக்குக் கிடைக்கும் முழு வருமானமும் நுகரப்பட்டு மீண்டும் பொருளாதாரத்தில்தான் மறுசுழற்சிக்கு உள்ளாகிறது. இது தொழில், சேவைத் துறைகளுக்குப் பெருத்த மூலாதாரமாக விளங்குகிறது. விவசாயத்தில் ஊதியமும் குறைந்து, விளைபொருட்கள் தொடர்பான விலைவாசி குறியீட்டெண்ணும் குறையும்போது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு, ஊதியம், உற்பத்தி, நுகர்வு என்று அனைத்துமே வீழ்ச்சியடைந்துவிடுகிறது. எனவே, புதிய வகை விலைவாசி குறியீட்டெண் இந்த நிலையை மாற்ற உதவும் என்று நம்ப இடமிருக்கிறது.
புதிய நுகர்வோர் விலை குறியீட்டெண் தயாரிப்பு வேலை இந்த ஆண்டே முடியுமானால் இந்த ஆண்டு முதலே விவசாயிகளுக்கு ஊதியத்தை உயர்த்தித் தர அரசு தயாராக இருக்கிறது; 2020-21 நிதியாண்டு வரைகூடக் காத்திருக்க விரும்பவில்லை. பொருளாதார மந்தநிலையைப் போக்கும் வழி கிராமப்புற நுகர்வைத் தூண்டுவதில்தான் இருக்கிறது. அதற்குக் கிராமப்புற மக்களுக்கு ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக அரசு எடுத்துள்ள வரவேற்கத்தக்க முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT