

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நடந்துவரும் அதிகார மோதல், தமிழ்நாடு உடற்கல்வியியல் - விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமன விவகாரம் மூலம் மேலும் வெட்டவெளிச்சமாகி யிருக்கிறது. 2021இல் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்தே ஆளுநர் மாளிகைக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஒருவகைப் பனிப்போர் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. சட்டசபை கூட்டத்தொடர் தேசியகீதம் பாடித்தொடங்கப்படவில்லை என ஆளுநர் வெளிநடப்பு செய்ததும் இரு முறை நடந்தது.
இத்தகைய மோதல்களில் உயர் கல்வி பயிலும் மாணவர்களும் பாதிக்கப்படுவதுதான் இன்னும் கவலை அளிக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தராக ஆளுநர்பொறுப்பு வகிக்கிறார். ஆனால், தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழகங்களின் வேந்தராகச் சில ஆலோசனைகளைச் செயல்படுத்த அழுத்தம் கொடுப்பதும் அதற்குத் தமிழக அரசு உடன்படாமல் இருப்பதும் தொடர்கதையாக நீள்கிறது.